மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டியது. இதேபோல், சிற்றார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, வேகமாக நிரம்பி வருவதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.